வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009 ·

மலை மலை
[ Friday, 07 August 2009, 04:48.21 PM GMT +05:30 ]
சரியான ‘ரூட்டை’ பிடிச்சிட்டேன்னு சொல்லாம சொல்ல நினைத்தாரோ என்னவோ? அருண் விஜய்க்கு இந்த படத்தில் வேன் டிரைவர் வேஷம்.
பஸ் ஸ்டாண்டில் என்ட்ரியாகி, பறக்க பறக்க அடிக்கிற மசாலா மன்மதனாகியிருக்கிறார். பழனியில் துவங்குகிற கதை, சென்னையில் முடிவதற்குள் ஒரு இரத்த வங்கியே தேவைப்படுகிற அளவுக்கு பிளட் லாஸ். ஆனால் டைரக்டர் அருணுக்காக கொடுத்திருக்கும் பில்டப் இருக்கே, பாஸ்! பாஸ்!

பழனிக்கு விருந்தாளியாக வரும் வேதிகா, சென்னைக்கு திரும்பும்போது அருணின் மனசையும் கையோடு கொண்டு போக, பின்னாலேயே விரட்டுகிறது காதல். அவரை தேடி சென்னைக்கு வருகிறார் அருண். இங்கே, வழியோட போற வில்லன் பிரகாஷ் ராஜூக்கும் அருண் விஜய்க்கும் நடுவில் பற்றிக் கொள்கிறது கனல். புத்தூர் கட்டு போட்டாலும், போல்ட் போட்டு முடுக்கினாலும் கூட, சேரவே முடியாதளவுக்கு எலும்புகளை நொறுக்கி எதிரிகளை பந்தாடுகிறார் அருண். ட்விஸ்ட் என்னவென்றால் இந்த பிரகாஷ்ராஜும், அருணின் ஆசை அண்ணன் பிரபுவும் பால்ய கால நண்பர்கள். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் ஒரு சவால் வேண்டுமே? எண்ணி ஏழே நாளில் என் காதலி கழுத்திலே தாலியை கட்டுறேன். முடிஞ்சா தடுத்துக்கோ என்று அருணும், பார்க்கிறேண்டா என்று பிரகாஷ்ராஜும் மணிக்கட்டை முறுக்க, கடைசி ரீலில் தீ பற்றாத குறையாக முடிகிறது படம்.

நிறைய உழைத்திருக்கிறார் அருண் விஜய். முந்தைய படங்களை ஒப்பிட்டால், நடிப்பின் ஹைட் ‘மலை’யை தொட முயல்கிறது. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் பிடிவாத அண்ணனுக்கு கஸ்தூரியை கட்டி வைக்க துடிக்கும் இவரது பாசம், ‘தம்பியுடையான் கல்யாணத்துக்கு அஞ்சான்’ என்று கைதட்ட வைக்கிறது. வேதிகாவுக்கும் இவருக்குமான காதல், ரொமான்ஸ் ரோஸ்ட்!

வேதிகா தனக்கேற்ற கதையை பிடிப்பது இருக்கட்டும். தனக்காக கொஞ்சம் சதையை பிடிக்க வைத்தால் நல்லது. பாடல் காட்சிகளில் அற்புத நெளிவு. ஆனந்த ஆட்டம். அது போதுமா ஹீரோயினுக்கு?

கொடுவாள் மீசையோடு என்ட்ரி ஆகும் பிரபு, தம்பிக்காக செய்யும் தப்பு தண்டாக்கள் ஜாலி. சென்னைக்கு வந்து பிரகாஷ்ராஜுடன் மல்லு கட்டுவார் என்று எதிர்பார்த்தால், டேய்... பிரண்டு என்று தோளில் கை போட்டுக் கொள்கிற காட்சி, கதையோட்டத்தில் வரும் ஹேர் பின் பெண்டு! தனது காதலி இறந்தது தெரியக் கூடாது என்றே போனில் கல்யாணம் செய்து வைக்கிறாரே, கண்ணீருக்கு நடுவில் கைதட்டல்!
பிரகாஷ்ராஜ் வழக்கம் போல சூப்பர். கண்களில் சிரித்து, அதே கண்களில் குரூரம் காட்டி, அப்படியே அழவும் செய்கிற அந்த ஜாலம், அவருக்கே வாய்த்த மாயாஜாலம்!

முன்னாள் கதாநாயகி கஸ்தூரி இந்த படத்தில் இரண்டாவது நாயகி. (டைரக்டருக்கு பாறாங்கல்லு மனசுய்யா) புரஃபைல் காட்சிகளில் முடிகயிறு(?) போடுகிற அளவுக்கு மிரட்டியிருக்கிறார்.

சந்தானம், ஆர்த்தி காதலுக்கு தியேட்டரே திண்டாடிப் போகிறது. அதுவும் ‘கல்லை மட்டும் கண்டால்’ அறிமுகத்தோடு வந்திறங்கும் சந்தானம், கவுண்டரை மிஞ்சிய சிரிப்பு என்‘கவுண்டர்!’ கஞ்சா கருப்புவிடம் பிரைட்னஸ் கம்மியா இருக்கு. கவனிங்க சாரு.

மணிசர்மாவின் குத்து ஒவ்வொன்றும் விருந்துக்கேற்ற பீடா.

மலை மலை- மலைப்பு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Archives